தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளத்திற்காக நிலம் கையகப்படுத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் சனிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக, உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளுடன் சப்-கலெக்டர் பிரபு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், முள்ளக்காடு பேருந்து நிறுத்தம் அருகே இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் மற்றும் வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்க நிறுவனத் தலைவர் சுபாஷ் பண்ணையார் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது பேசிய சுபாஷ் பண்ணையார், முள்ளக்காடு, கோவளம், பசுவந்தரை, தன்பாடு உள்ளிட்ட பகுதிகளில் 93 ஆண்டுகளுக்கும் மேலாக உப்பு உற்பத்தி நடைபெற்று வருவதாகவும், இந்தத் தொழிலை நம்பி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

கப்பல் கட்டும் தளத் திட்டம் உப்பளத் தொழிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்பதால், தமிழக அரசு உடனடியாக அந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றார். ஏற்கெனவே பனைத் தொழில் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது உப்பளத் தொழிலையும் அழிக்கும் நடவடிக்கை நடைபெறுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், "விஜய் நடித்த கத்தி திரைப்படத்தில் விவசாய நிலங்களை காக்க போராடியதைப் போல, இன்று உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை காக்க போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசே எங்களை போராட்டத்திற்கு தள்ள வேண்டாம். இந்தப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்டமாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தப்படும். தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சூழல் தொடர்ந்தால், மாவட்டம் அமைதியாக இருக்காது" என்று எச்சரித்தார்.
போராட்டத்தில் உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர், தலைவர் மந்திரமூர்த்தி, பொருளாளர் பொன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் முள்ளக்காடு, முத்தையாபுரம், பொட்டல்காடு, புல்லாவழி, சவேரியார்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த உப்பு தொழிலாளர்கள், மீனவர்கள் திரளாக கலந்து கொண்டு, "பாரம்பரிய உப்புத் தொழிலை காப்போம்", "இயற்கை வளங்களை அழிக்காதே" என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படவிளக்கம்:
முள்ளக்காட்டில் நடைபெற்ற உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டத்தில் வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்க நிறுவனத் தலைவர் சுபாஷ் பண்ணையார் பேசுகிறார்