தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமை காலை தூத்துக்குடி ராஜாஜி பூங்கா எதிரே உள்ள கைலாஷ் மஹாலில் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் செய்தியாளர்களிடம் பல்வேறு அரசியல் மற்றும் கல்வி தொடர்பான கருத்துகளை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
"இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்பது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உறுதியான நிலைப்பாடாகும். ஆனால் தற்போதைய மத்திய பாஜக அரசின் கல்விக் கொள்கைகள் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றன. குறிப்பாக நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் தொடர்பான குழப்பங்களும், தேர்வுகள் தள்ளிப்போவதும் மாணவர்களுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
கல்வி அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தினார். அதேபோன்று நாடு முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரத்திலான, சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கையாகும்.
இந்த நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 'மாணவர்களின் குரல்' என்ற இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் தரமான மற்றும் சமமான கல்வி கிடைக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
தற்போது உயர்கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களை நாட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இது கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது. இந்தியா முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகளுடன் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும்.
இந்தக் கொள்கையை மக்களிடையே எடுத்துச் செல்லும் வகையில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மராத்தான் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது," என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.