கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்த 7 மாத குழந்தைக்கு தேவையான உறவுமுறைச் சான்றிதழை வெறும் 4 மணி நேரத்தில் வழங்கி துரித நடவடிக்கை எடுத்த எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7 மாத குழந்தை, கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தைக்கு சென்னை மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்குத் தேவையான உறவுமுறைச் சான்றிதழை சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து பெற்றுவருமாறு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
இதையடுத்து குழந்தையின் குடும்பத்தினர் சமூக வலைதளம் மூலம் கோவில்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கரு. இராஜசேகரனைத் தொடர்புகொண்டனர். அவர் தனது நண்பரும் சமூகச் செயற்பாட்டாளருமான கப்பிகுளம் பாபுவுடன் இணைந்து, மனுதாரரை அழைத்துக்கொண்டு எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினர்.
குழந்தையின் மருத்துவ அவசரத் தேவையை அறிந்த வட்டாட்சியர் சுபா, உடனடியாக சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, தேவையான விசாரணை மற்றும் பரிந்துரை அறிக்கைகளை விரைந்து பெற நடவடிக்கை எடுத்தார். அவரது உத்தரவின் பேரில் சோழபுரம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் டி. சண்முகபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர் வெளிப்பணியில் இருந்த நிலையிலும், மாற்று அலுவலரை நியமித்து உறவுமுறைச் சான்றிதழைத் தயாரிக்க ஏற்பாடு செய்த வட்டாட்சியர், அலுவலக நேரம் முடிவதற்கு முன்பாகவே சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுத்தார்.
பொதுமக்கள் பல்வேறு அலுவலகங்களில் சான்றிதழ்களுக்காக அலைக்கழிக்கப்படும் சூழலில், மருத்துவ அவசரத் தேவையை உணர்ந்து மனிதநேயத்துடன் செயல்பட்ட எட்டயபுரம் வட்டாட்சியர் சுபாவின் சேவைக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்தச் சேவைக்காக வட்டாட்சியருக்கு கரு. இராஜசேகரன் நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.