1,800 ஏக்கர் நில எடுப்பை கைவிட வேண்டும்: தமிழக அரசுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல்
தூத்துக்குடி, ஆக. 7:
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு, முத்தையாபுரம் பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் சுமார் 1,800 ஏக்கர் நில எடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 25 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ். லாரன்ஸ் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது:
முள்ளக்காடு, முத்தையாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 90 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் உப்புத் தொழிலை நம்பி 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க சுமார் 1,800 ஏக்கர் நிலம் எடுக்கப்படுவதால் உப்பள உரிமையாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
முள்ளக்காடு முதல் ஆறுமுகநேரி வரையிலான கடற்கரைப் பகுதிகளில் தரமான உப்பு உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் தேவைக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முள்ளக்காடு, முத்தையாபுரம், கோவளம், பசுவந்தரை, புள்ளாவளி, பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்களை நம்பி பல ஆயிரம் தொழிலாளர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.
25 பேர் மீது வழக்கு:
கடந்த 2-ம் தேதி முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளத் திட்டத்திற்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டு அமைதியான உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 25 பேர் மீது முத்தையாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக ஜனநாயக மற்றும் அகிம்சை வழியில் போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்:
உப்பள உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களை அரசு நேரடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சுமூகமான தீர்வு காண வேண்டும். பல ஆண்டுகளாக சொத்துகளை விற்றும், கடன் பெற்றும் தொழில் செய்து வரும் உப்பள உரிமையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், காந்தியடிகளின் தண்டி யாத்திரையுடன் வரலாற்றுத் தொடர்புடைய இப்பகுதியில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் பாரம்பரிய உப்புத் தொழிலை பாதுகாக்க வேண்டும்.
மாபெரும் போராட்டம்:
அரசின் கவனம் இப்பிரச்னையில் திரும்பவில்லை என்றால், தூத்துக்குடியில் பாட்டாளி வர்க்க மக்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்த கூட்டமைப்பு தயாராக உள்ளது.
எனவே, தமிழக முதல்வர் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, ஏழை உப்புத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். கப்பல் கட்டும் தளத் திட்டத்தை கைவிடுவதற்கான உறுதியை தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.