தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் மதுபானக் கடைகள் மூடப்பட்ட பின்னரும் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக புகார் அளித்த சமூக ஆர்வலர், அவரது வீட்டுக்குள் புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி நேசமணி நகரைச் சேர்ந்தவர் மரியவின்சென்ட் (72). இவர் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜின் தந்தை ஆவார். சமூக ஆர்வலரான மரியவின்சென்ட், முத்தையாபுரம் பகுதியில் மதுபானக் கடைகள் மூடப்பட்ட பின்னரும் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த புகார் குறித்து அறிந்த நேசமணி நகரைச் சேர்ந்த ராஜ் என்ற பொன் கற்பகராஜ் (35) என்பவர் ஆத்திரமடைந்து மரியவின்சென்ட்டின் வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, “கள்ளச்சந்தையில் மது விற்பனை குறித்து எப்படி புகார் அளிக்கலாம்?” எனக் கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், தொடர்ந்து அவரது முகம் மற்றும் கண் பகுதியில் மாறி மாறி கைகளால் தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த மரியவின்சென்ட்டின் கண் பகுதி உடனடியாக வீங்கியதுடன், தாக்குதலால் நிலைகுலைந்து அவர் மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மரியவின்சென்ட் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் ராஜ் என்ற பொன் கற்பகராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியினர் கண்டனம்
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்று கூடி, சமூக ஆர்வலர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். சட்டவிரோத செயல்கள் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் கூறியதாவது:
“நான் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், எனது தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் திமுக இளைஞர் அணி நிர்வாகியாக உள்ளார். எனவே, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத்தை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். மேலும், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளோம்” என்றார்.
சட்டவிரோத மது விற்பனை குறித்து புகார் அளித்த 72 வயது முதியவர் வீடு புகுந்து தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது