தூத்துக்குடி, ஏப். 27:
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2025–26 நிதியாண்டில் நிகர லாபம் ₹1,337.55 கோடியாக உயர்ந்துள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சலி எஸ். நாயர் தெரிவித்தார். இது கடந்த ஆண்டை விட 13.10% அதிகமாகும்.
மார்ச் 31, 2026-இல் முடிவடைந்த நிதியாண்டிற்கான செயல்திறன் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வங்கியின் மொத்த வணிகம் ₹1,15,091 கோடியாக உயர்ந்து 17.37% வளர்ச்சி பெற்றுள்ளதாக கூறினார்.
மேலும், வைப்புத் தொகைகள் 14.94% உயர்ந்து ₹61,712 கோடியாகவும், மொத்த கடன் ₹53,379 கோடியாக உயர்ந்து 20.32% வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்தார்.
வங்கியின் சொத்து தரம் குறிப்பிடத்தக்க முறையில் மேம்பட்டு, மொத்த வாராக்கடன் (Gross NPA) 1.25% இலிருந்து 0.73% ஆகவும், நிகர வாராக்கடன் (Net NPA) 0.36% இலிருந்து 0.18% ஆகவும் குறைந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் 44 புதிய கிளைகள் தொடங்கப்பட்டதால், வங்கியின் கிளைகள் எண்ணிக்கை நாடு முழுவதும் 622 ஆக உயர்ந்துள்ளது.
வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த AI அடிப்படையிலான கால் சென்டர், Oracle CX தளம், பாதுகாப்பான இணைய வங்கி வசதிகள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வங்கியின் செயல்திறனை முன்னிட்டு, ₹10 முகவிலை கொண்ட பங்கிற்கு ₹12.50 இறுதி லாபப்பங்கீடு வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது.
MSME மற்றும் சில்லறை வணிகத் துறைகளில் வங்கி எடுத்துள்ள கவனம் மற்றும் நிலையான வளர்ச்சி உத்தி இந்த சாதனைக்கு காரணம் என நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.