தமிழகத்தில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு அரசு மதுபான கடைகளில் மது விற்பனை செய்யக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து கடை பணியாளர்களுக்கும் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விதிமுறையை மீறினால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் 2003-ன் விதி 11A படி, 21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு மதுபானங்கள் விற்கவோ, வழங்கவோ கூடாது என்ற நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. தற்போது அந்த விதியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்கள் மற்றும் புகார்கள் காரணமாக இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மது வாங்க வருபவர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள ஆவணங்களை சரிபார்த்த பிறகே மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்ட அளவில் பறக்கும் படையினர் திடீர் சோதனைகளில் ஈடுபட உள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.