தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி தொழில் மற்றும் அதனை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி, உப்பள தொழிலாளர்கள், உப்பு உற்பத்தியாளர்கள், மீனவர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி கடற்கரையை ஒட்டிய முள்ளக்காடு, கோவளம், பசுவந்தரை, தன்பாடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் 300-க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் கடந்த 93 ஆண்டுகளாக உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். இந்தத் தொழிலை நம்பி சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவை சிப்காட் மூலம் கையகப்படுத்தி, வெளிநாட்டு நிறுவனங்களுக்காக கப்பல் கட்டும் தளம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக அண்மையில் தூத்துக்குடி சப்-கலெக்டர் பிரபு, உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாற்று இடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தலைமுறை தலைமுறையாக மேற்கொண்டு வரும் உப்பு உற்பத்தி தொழிலை இடமாற்றம் செய்ய முடியாது எனக் கூறி, அந்த யோசனையை உற்பத்தியாளர்கள் நிராகரித்தனர்.
இதையடுத்து, உப்பளங்களை பாதுகாப்பது தொடர்பாக உப்பு உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் மந்திரமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் சேகர், பொருளாளர் பொன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சின்னராஜ், முகேஷ், சண்முகவேல், எல்.ஆர். சிவாகர், பாலசுப்பிரமணியன், ஈ. பால், அழகேசன், சண்முகசுந்தர ராஜா, சண்முகநாதன், ஸ்ரீராம், பொன்ராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் உள்ள உப்பளங்களையும், மீன்பிடித் தொழிலையும் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும் என்றும், உப்பு உற்பத்தி தொழிலை பாதுகாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட உப்பள தொழிலாளர்கள், உப்பு உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கத்தினர், முள்ளக்காடு பகுதி மீனவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர், உப்பு உற்பத்தி தொழிலும் அதனைச் சார்ந்த வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது.