தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் இன்று திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தீவிர அரசியல் கருத்துகளை முன்வைத்தார்.
பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதிகளில் நடைபெற்ற ரோட்ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பெண்கள் மற்றும் பொது மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை பகுதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, மாற்றத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் என அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர், “இந்த தேர்தல் முக்கியமாக த.வெ.க மற்றும் திமுக இடையேயான போட்டி” என கூறி, நேரடியாக ஆளும் கட்சியை எதிர்த்து சவால் விட்டார்.
அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், ஊழல், நிர்வாக குறைபாடுகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினார். பொதுமக்களுக்கு நியாயமான ஆட்சி தேவை என்றும், மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இளைஞர்கள் மற்றும் பெண்கள் தான் அரசியல் மாற்றத்தின் முக்கிய சக்தி எனக் கூறிய விஜய், புதிய தலைமுறை அரசியலில் அதிகமாக ஈடுபட வேண்டும் என அழைப்பு விடுத்தார். மேலும், மக்கள் நலன், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சமூக நீதி ஆகியவை தனது அரசியல் நோக்கங்களில் முக்கியமானவை என தெரிவித்தார்.
அவரது உரையில், “இது ஒரு அதிசயமான தேர்தல்” எனக் குறிப்பிட்டு, மக்கள் தீர்மானமே தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்றும் என அவர் கூறினார்.
விஜயின் வருகையையொட்டி நெல்லை முழுவதும் பெரும் திரளான மக்கள் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது பேச்சு நடைபெறும் இடங்களில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
இந்த பிரச்சார கூட்டம் தென் மாவட்டங்களில் தேர்தல் சூழலை மேலும் சூடுபடுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.