தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட அனைத்து முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும் அதிக அளவில் வளர்ந்துள்ள முட்செடிகள் மற்றும் புதர்களை உடனடியாக அகற்றி, பொதுமக்களுக்கு பாதுகாப்பான சாலை போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சாத்தான்குளம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் திருமதி கோமதி சங்கரியை நேரில் சந்தித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தட்டார்மடம் சகாய சீலன் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மனுவை வழங்கினர்.
அந்த மனுவில், சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல சாலைகளின் இருபுறங்களிலும் முட்செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களை சரியாக கவனிக்க முடியாத நிலை உருவாகி விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாலையோர முட்செடிகள் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அவசர சேவை வாகனங்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவதாகவும், மழைக்காலங்களில் இந்த பிரச்சினை மேலும் தீவிரமடைவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலையோரங்களில் வளர்ந்துள்ள முட்செடிகள் மற்றும் புதர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஒன்றிய குருதிக்கொடை பாசறை செயலாளர் விக்னேஷ், துணை செயலாளர் வினோத், தகவல் தொழில்நுட்ப பிரிவு (IT Wing) துணை செயலாளர் பிரைட் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.