அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம்: உப்பு உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை
தூத்துக்குடி, ஜூலை 17:
தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
கோவளம்–பசுவந்தரை–தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முள்ளக்காடு பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் 300-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர்கள் கடந்த 93 ஆண்டுகளாக உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர். இந்தத் தொழிலை நம்பி சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவை வெளிநாட்டு நிறுவனத்துக்காக கப்பல் கட்டும் தளம் அமைக்கும் நோக்கில் சிப்காட் மூலம் கையகப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால், அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும், மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உப்பள நிலங்களின் குத்தகையை நீட்டித்து வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தாலும், இதுவரை அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு உப்பளத் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கப்பல் கட்டும் தளத்தை இந்தப் பகுதியில் அமைக்காமல், மாவட்டத்தில் உள்ள மாற்று புறம்போக்கு நிலத்தில் அமைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர்களிடம் மனு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், வருவாய்த் துறை மற்றும் சிப்காட் அதிகாரிகள் உப்பளப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டதாகவும், இதையடுத்து சங்கத் தலைவர் மந்திரமூர்த்தி, பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் சின்னராஜ், முகேஷ், சண்முகவேல், எல்.ஆர். சிவாகர், பாலசுப்பிரமணியன், ஈ. பால், அழகேசன், சண்முகசுந்தரராஜா, சண்முகநாதன், ஸ்ரீராம் உள்ளிட்ட ஏராளமான உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் திரண்டதாகவும் கூறினார். அவர்களைக் கண்டதும் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றதாகவும் தெரிவித்தார்.
மேலும், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை சந்தித்து கப்பல் கட்டும் தளத்தை வேறு இடத்தில் அமைக்க கோரிக்கை விடுத்தபோது, நேரில் ஆய்வு செய்து முடிவு செய்வதாக தெரிவித்ததாகவும், பின்னர் சிவகாசியில் அமைச்சரைச் சந்திக்க பல மணி நேரம் காத்திருந்தும் சந்திக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் சேகர் குற்றம்சாட்டினார்.
சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர்களின் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில், உப்பளத் தொழிலை பாதுகாக்க தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று அவர் எச்சரித்தார்.
இதையடுத்து, உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.