கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில், உண்மை நிலையை சட்டரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என, வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கரூர் மாவட்டத்தில் பேசுபொருளாகியுள்ள அனைத்து நிலங்களும் திருக்கோவில் சொத்துகள் அல்ல. பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை. ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம், 1963-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ரயத்வாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இந்த ரயத்வாரி பட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக அந்த நிலங்களை சாகுபடி செய்து, சட்டப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர்.
ஆனால், கடந்த ஆட்சியில் ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோவில் நிலங்களுடன் சேர்த்து பூஜ்ஜிய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டதால், அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் கடன் பெறுதல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.
தற்போதைய தமிழக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை உறுதி செய்வதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டியதே தவிர, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில், உண்மையான திருக்கோவில் சொத்துகள் எதுவும் சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. கோவில் சொத்துகளை பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதும் அரசின் முக்கியமான பொறுப்பாகும்.
எனவே, சட்டப்பூர்வமாக ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதோடு, பல ஆண்டுகளாக நீடித்து வந்த பதிவுச் சிக்கல்களுக்கும் தீர்வாக அமையும்," என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.