தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அண்ணாமலை தொடங்கியுள்ள வி த லீடர் புதிய இயக்கத்தின் மாவட்ட அளவிலான முதல் ஆலோசனைக் கூட்டம், முத்தையாபுரம் மரியா மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையின் பிரதிநிதி கரு நாகராஜன், "வி த லீடர் இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாறி தீவிர அரசியலில் ஈடுபடும். அதற்காக உறுப்பினர்கள் அனைவரும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்" என்றார்.
கூட்டத்திற்கு உமரி எஸ். சத்தியசீலன் தலைமை வகித்தார். சிவமுருக ஆதித்தன், சின்ன தங்கம், ஜமீன் கிருஷ்ணன், பொன் விக்னேஷ், துர்க்கையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதவன், ராஜேஷ்கனி ஆகியோர் வரவேற்றனர்.
அண்ணாமலையின் பிரதிநிதியாக கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய கரு நாகராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"சமூக சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர் அண்ணாமலை. எந்த விஷயத்தையும் விரைவாக உள்வாங்கி தெளிவாக வெளிப்படுத்தும் திறன் அவருக்கு உள்ளது. அதனால் அவர் எப்போதும் அரசியல் பேசுபொருளாக இருக்கிறார். தமிழகத்தில் பாஜக வாக்கு விகிதத்தை உயர்த்த கடுமையாக உழைத்ததுடன், திமுக அரசின் தவறுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தார். அதன் அரசியல் பலனை தற்போது விஜய் அறுவடை செய்துள்ளார்.
விஜய் கட்சி தொடங்கிய உடனே முதல்வராகவில்லை. அரசியலுக்கு வருவதற்கு முன்பாக சுமார் 30 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். அந்த தலைமுறை இளைஞர்கள் தற்போது அவருக்கு ஆதரவாக உள்ளனர்.
தற்போதைய அரசு திமுகவினருக்கு எதிரான ஊழல் வழக்குகளில் நடவடிக்கை எடுத்து வருவதை அண்ணாமலை வரவேற்றுள்ளார். ஏற்கனவே 'திமுக பைல்ஸ்' மூலம் பல்வேறு ஆவணங்களை வெளியிட்ட அவர், அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளிலும் முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
வி த லீடர் இயக்கத்தின் சார்பில் வரும் ஜூலை 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் அண்ணாமலை தலைமையில் மிகப்பெரிய போதை தடுப்பு விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது. போதைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. அண்ணாமலை நிறைவுரையாற்ற உள்ளார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்ச்சியிலும், பின்னர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பொதுக்கூட்டங்களிலும் அவர் பங்கேற்க உள்ளார்.
அண்ணா ஹசாரே போல முதலில் சமூகப் பணிகளை மையமாகக் கொண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சமூக சேவை, விழிப்புணர்வு, வழிகாட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்ட பிறகு தீவிர அரசியலில் களமிறங்கும். அந்த அரசியல் பயணமும் அதிரடியாக இருக்கும்.
அதனால் புதிய உறுப்பினர்கள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். விவசாயத்திற்கு பயன்படும் ஏரிகள், குளங்களை சீரமைத்தல் போன்ற மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ளுங்கள். அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு அண்ணாமலையே நேரில் வருவார்.
தமிழக உரிமைகள் மற்றும் மண் சார்ந்த உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில்தான் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். எதிர்காலத்தில் கோடிக்கணக்கான மக்கள் அண்ணாமலையை ஆதரிப்பார்கள்" என்றார்.
இதனைத் தொடர்ந்து, பாஜக மண்டலத் தலைவர்கள் சாத்தான்குளம் சரவணன், ஆழ்வை கிழக்கு சிவஜோதி பாண்டியன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் வி த லீடர் இயக்கத்தில் இணைந்தனர். மேலும், சுரபி கல்வி மற்றும் சமூகத் தொண்டு நிறுவனத் தலைவர் செல்வராஜும் தனது ஆதரவாளர்களுடன் இயக்கத்தில் இணைந்தார். அனைவரையும் கரு நாகராஜன் வரவேற்று உறுப்பினர் சேர்க்கை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் சிவத்தையாபுரம் ஹரிகரசுதன், ஸ்ரீவைகுண்டம் பாலமுருகன், முருகேசன், வேல்முருகன், பாலக்குமார், ராஜகோபால், எம்.சி. சேகர், சுனாமி ஆறுமுகம், கார்த்திகை மீனா, சிலம்பொழி, ஐஸ்வர்யா, ராமக்கனி, தங்கரதி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.