அண்ணாமலை தொடங்கியுள்ள "வி த லீடர்" இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை பணி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் மாவட்ட பொறுப்பாளர் உமரி எஸ். சத்தியசீலன் தலைமையில் நிர்வாகிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து கிராமங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்டமாக சின்னதங்கம், ராஜேஷ்கனி, துர்கையப்பன், ஆசை மாதவன், பொன் விக்னேஷ் ஆகியோர் தலைமையிலும், தொடர்ந்து சிவத்தையாபுரத்தில் ஹரிகரசுதன், ஆத்தூரில் சரவணன், ஸ்ரீவைகுண்டத்தில் பாலமுருகன், ஆறுமுகநேரியில் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடைபெற்றன. இதன் மூலம் சுமார் 25 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இயக்கத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தொகுதி வாரியான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான முதல் ஆலோசனைக் கூட்டம் நாளை (ஜூன் 26) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி முத்தையாபுரம் மரியா மஹாலில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு உமரி எஸ். சத்தியசீலன் தலைமை தாங்குகிறார். அண்ணாமலையின் அறிவுறுத்தலின்படி நடைபெறும் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கரு நாகராஜன் கலந்து கொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மாதம் மேற்கொள்ளப்பட உள்ள இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை உமரி சத்தியசீலன், சின்னதங்கம், மாதவன், ராஜேஷ்கனி, சிவமுருகன் ஆதித்தன், பால பொய்சொல்லான், துர்கையப்பன், ஜமீன் கிருஷ்ணன், கார்த்திகை மீனா, எம்.சி. சேகர், ராஜகோபால், கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக டிஜிட்டல் பேனர்கள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு மாநகராட்சி அலுவலர்களிடம் இயக்க நிர்வாகிகள் விளக்கம் கோரி பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும், இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.