தூத்துக்குடி கோவளம், பசுவந்தரை, தன்பாடு பகுதிகளைச் சேர்ந்த சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சங்கச் செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது. சங்கத் தலைவர் மந்திரமூர்த்தி, பொருளாளர் பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் சின்னராஜ், முகேஷ், சண்முகவேல், எல்.ஆர். சிவாகர், பாலசுப்பிரமணியன், ஈ.பால், முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகிகள், துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் கப்பல் கட்டும் விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் உள்ள உப்பளங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
முள்ளக்காடு, முத்தையாபுரம், புல்லாவழி, பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததாகவும் அவர்கள் கூறினர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், தங்களது வாழ்வாதாரப் பிரச்னையை அரசு புரிந்துகொண்டு தீர்வு காணும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தனர். மேலும், தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்று மீன்வளத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள ஸ்ரீநாத்தை சந்தித்து கோரிக்கைகள் வைக்கப்பட்டதாகவும், அமைச்சர் நேரில் உப்பளப் பகுதிகளை பார்வையிட்டு நம்பிக்கையூட்டும் பதில் அளித்ததாகவும் கூறினர். அமைச்சர் கீர்த்தனாவையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி மீது அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தொகுதி மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணாமல், கப்பல் கட்டும் விரிவாக்கத் திட்டத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.
மேலும், கப்பல் கட்டும் தொழிலை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும், உப்பளத் தொழிலை பாதிக்காத வகையில் மாற்று இடத்தில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் தெரிவித்தனர். தூத்துக்குடி வடபகுதியில் சிப்காட் வளாகத்தில் சுமார் 1,200 ஏக்கர் தரிசு நிலம் உள்ளதால், அங்கு கப்பல் கட்டும் தளத்தை அமைக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கூட்டத்தில் அழகேசன், சண்முகசுந்தரராஜா, சுடலைமணி, சண்முகநாதன், சுயம்பு, ஸ்ரீராம், பொன்ராம், பிரபாகர், பாரத், ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.