தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம், தூத்துக்குடி கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் முன்னிலை வகித்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மேயர் ஜெகன் பெரியசாமி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், கடந்த 20-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினார். பிப்.1 முதல் வீடுகள் தோறும் மகளிரை மையமாகக் கொண்டு நடைபெற உள்ள பரப்புரை, தலைமை அறிவித்துள்ள நட்சத்திர பரப்புரையாளர்களுடன் நடைபெறும் பொதுக்கூட்டங்கள், பிப்.7-ம் தேதி விருதுநகர் கல்குறிச்சியில் நடைபெற உள்ள தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, பிப்.21-ம் தேதி மதுரையில் நடைபெறும் தென் மண்டல பாகம் முகவர்கள் – பாக உறுப்பினர்கள் பயிற்சி மாநாடு ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வராக ஆக்கிட கட்சி செயல்வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள், பொருளாளர், மாநில அணி நிர்வாகிகள், தொகுதி பார்வையாளர்கள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மேலும் சமீபத்தில் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கடம்பூர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜாவும் கலந்து கொண்டார்.
8 தீர்மானங்கள் நிறைவேற்றம் :
2026 தேர்தலை முன்னிட்டு கழக வளர்ச்சி பணிகளை வேகப்படுத்துதல், பரப்புரை பணிகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.