தூத்துக்குடி மாநகராட்சியில் பகுதி சபா திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், 3-வது வார்டுக்கான பகுதி சபா கூட்டம் கலியா லாவோ பூங்காவில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் 3-வது வார்டு கவுன்சிலரும், தூத்துக்குடி மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவருமான ஆர்.ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பகுதி சபா உறுப்பினர்களான பிரபாகரன், செல்வராஜ், ஜவகர், டேனியல், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், 3-வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவரும், தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ரெங்கசாமி, கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் இருந்து நேரடியாக குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசுகையில்,
“பொதுமக்கள் முன்வைத்த அனைத்து பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகவும், அவற்றை மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், இந்தக் கூட்டத்தில் சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உள்ளூர் மேம்பாடு தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பகுதி சபா கூட்டத்தில் ராஜாமணி, ராஜசேகர், ராஜேஷ், கோபால், சேவியர், ராமர், ஜெயா, நம்பி உள்ளிட்டோர் மற்றும் மாநகராட்சி ஆய்வாளர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பகுதி சபா கூட்டத்தின் மூலம் தங்களின் கோரிக்கைகள் நேரடியாக கேட்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.