திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக ‘வி த லீடர்ஸ்’ இயக்கத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அண்மைக்காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த சிலர் தொடர்புடையவர்களாக கைது செய்யப்படுவது கவலைக்குரியதாக உள்ளது என்றார்.
பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்புக்காக தமிழகத்திற்கு வருவது இயல்பானது என்றாலும், அவர்களின் முழு விவரங்கள், பணியிடம் மற்றும் தங்குமிடத் தகவல்கள் அரசிடம் முறையாக பதிவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை, இருப்பிடம், சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அரசிடம் கட்டாயமாக வழங்க வேண்டும் என்றும், அவற்றை தமிழக அரசு தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.