கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா நேற்று (25) வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவையொட்டி பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் குற்றப் பிரிவு போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசலின் போது பக்தர்கள் தவறவிட்ட மூன்று செல்போன்களை போலீசார் பத்திரமாக மீட்டனர். பின்னர், கோவில் காவல் கட்டுப்பாட்டு அறை ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவித்து, உரிமையாளர்களை அடையாளம் கண்டு அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
கூட்ட நெரிசலான சூழலிலும் துரிதமாக செயல்பட்டு செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் வெகுவாக பாராட்டினார்.
திருவிழா முழுவதும் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.