சென்னை, ஜூலை 16:
மாநில அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஊழல் மற்றும் நிர்வாக ஒழுங்கு தொடர்பாக அவர் கடுமையான எச்சரிக்கையை விடுத்ததாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் எழுந்தால், அவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவையெனில் அமைச்சரவைப் பதவியும் பறிக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்க்கப்படாது. தவறு செய்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். த.வெ.க. அரசு லஞ்சமற்ற, வெளிப்படையான அரசாக இருக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், அமைச்சர்கள் ஆய்வு என்ற பெயரில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அடிக்கடி செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பள்ளிகளுக்கு சென்று ரீல்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள வீடியோக்களை பதிவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிகளின் இயல்பான கல்விச் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்றும், தேவையற்ற கள ஆய்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அமைச்சரவை கூட்டத்தின் போது, சில அமைச்சர்களை குறிப்பிட்டே முதலமைச்சர் விஜய் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், த.வெ.க. அரசில் ஊழலுக்கு எந்தவித சமரசமும் இருக்காது என்பதையும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுக்கத்தை உறுதி செய்வதில் அரசு உறுதியாக இருப்பதையும் முதலமைச்சர் விஜய் மீண்டும் வலியுறுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.