ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனையில் செயல்பட்டு வரும் அமுதம் நியாய விலைக் கடையில் 1,200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை (ஆக.31) காலை 10.30 மணி வரை ரேஷன் கடை திறக்கப்படாததால், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் கடை முன்பு காத்திருந்தனர். அப்போது அவ்வழியாகச் சென்ற சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் பாபுவிடம் பொதுமக்கள், ரேஷன் கடையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கப்பிகுளம் பாபு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரை தொடர்பு கொண்டு கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து சுமார் 30 நிமிடங்களில் விற்பனையாளர் வந்து ரேஷன் கடையைத் திறந்தார்.
எனினும், கப்பிகுளம் பாபு தலைமையில் 70-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் கடை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயரதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பொருட்களை வாங்குவோம் என அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில், பசுவந்தனை அமுதம் நியாய விலைக் கடை வாரந்தோறும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்கள் திறந்து செயல்படுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு, ரேஷன் பொருட்களை வாங்க ஒப்புக்கொண்டனர்.
முன்னதாக, ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படாமல், கடை செயல்படாதது குறித்த எந்தத் தகவலும் அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கப்படாமல் விற்பனையாளர் கடையை பூட்டிச் சென்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.