தூத்துக்குடி அருகே முள்ளக்காடு ஊராட்சியில் நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ரஞ்சித் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா, முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் விஜயகாண்டீபன், யூனியன் பற்றாளர் அருண்கார்த்திக் பாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி செயலர் சங்கர ராமசுப்பிரமணியன் வரவேற்று, அரசின் திட்டங்கள் மற்றும் தீர்மானங்களை வாசிக்கத் தொடங்கினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற கோவளம், பசுவந்தனை, தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சேகர், சின்னராஜ், பாலசுப்ரமணியன், சிவாகர், பாஸ்கர், பிரபாகர், காசி, பாரத் உள்ளிட்டோர், வியாபாரிகள் சங்கத் தலைவர் சின்னதங்கம், கிங் மேக்கர் காமராஜர் மக்கள் சங்க நிறுவனத் தலைவர் கராத்தே கோகுல் மற்றும் ஊர் பொதுமக்கள், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் முனியசாமி, முருகன், ஜோதிபாசு, பாஸ்கர் உள்ளிட்டோர் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், தூத்துக்குடியில் கப்பல் கட்டும் விரிவாக்கத் தளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதனை முள்ளக்காடு உப்பளப் பகுதியில் அமைக்காமல் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். உப்பளங்கள் பாதிக்கப்படாத வகையிலும், உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், இந்தக் கோரிக்கையை கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், இன்றைய கூட்டம் அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சி தொடர்பான கோரிக்கைகளுக்காக நடத்தப்படுவதாகவும், கப்பல் கட்டும் திட்டம் தொடர்பான கோரிக்கையை இக்கூட்டத்தில் தீர்மானமாக வைக்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தில் சலசலப்பு நிலவியதைத் தொடர்ந்து போலீசார் தலையிட்டு அனைவரையும் அமைதிப்படுத்தினர்.
தொடர்ந்து, தங்களது கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்ற அதிகாரிகள் மறுத்ததாக கூறி, உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகையில், “முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பளங்களை பாதுகாக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போராடி வருகிறோம். கப்பல் கட்டும் விரிவாக்கத் திட்டத்தால் உப்பளங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதே எங்களது கோரிக்கை. இதனை கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வலியுறுத்தினோம். ஆனால், எங்களது கோரிக்கையை தீர்மானமாக வைக்க மறுத்ததால் கூட்டத்தை புறக்கணித்துள்ளோம்” என்றனர்.
கிராம சபை கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிய சம்பவம் முள்ளக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.