தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு, கோவளம், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்கள் மற்றும் மீன்பிடி பகுதிகளை பாதுகாக்க வலியுறுத்தி, உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை திரட்டி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவளம், பசுவந்தரை, தண்பாடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொருளாளர் பொன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் ரகுபதி, முகேஷ், சண்முகவேல், பாலசுப்ரமணியன், எல்.ஆர். சிவாகர், வழக்கறிஞர் பாஸ்கர், மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல தலைமுறைகளாக உப்பு உற்பத்தி நடைபெற்று வரும் உப்பளப் பகுதிகள் மற்றும் மீனவர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் மீன்பிடி இடங்களை தமிழக அரசு சிப்காட் மூலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கொரிய நாட்டைச் சேர்ந்த கப்பல் நிறுவனத்திற்காக கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக உப்பளங்கள் மற்றும் மீன்பிடி பகுதிகளை கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். கப்பல் கட்டும் திட்டத்தை உப்பளங்கள் மற்றும் மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாத மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், உப்பளங்களை பாதுகாக்கக் கோரி உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்து வரும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, உப்பு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை தமிழக சட்டமன்றத்தில் எழுப்பி பேசிய தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்துக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், இந்தப் பிரச்சினை தொடர்பாக 10 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் மீனவர்களின் கோரிக்கைகளை எடுத்துரைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக சங்க நிர்வாகிகள் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி மற்றும் மீன்பிடித் தொழில் என்பது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. உப்பளங்கள் அழிக்கப்பட்டால் உப்பு உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி உப்பளத் தொழிலாளர்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே, உப்பளங்கள் மற்றும் மீன்பிடி பகுதிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். கப்பல் கட்டும் திட்டத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். இல்லையெனில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களை ஒருங்கிணைத்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
தமிழக அரசு தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். தமிழக முதல்வரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை நேரடியாக தெரிவிக்க உரிய அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.