மக்களுக்கும், வாக்காளர்களுக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்து தெளிவான புரிதல் ஏற்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதி எவ்வாறு பகிரப்படுகிறது என்பது முதல், கிராம சபை மற்றும் திட்டக்குழுவின் செயல்பாடுகள் வரை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
“அரசியல் என்றால் என்ன, பொருளாதாரம் என்றால் என்ன, அவற்றை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை மக்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மத்திய அரசு மற்றும் மாநில அரசு வழங்கும் நிதி எவ்வாறு பகிரப்படுகிறது என்பதையும் மக்கள் அறிந்திருக்க வேண்டும்.
ஒரு பஞ்சாயத்தில் திட்டக்குழு என்றால் என்ன, கிராம சபை என்றால் என்ன என்பதையும், தங்களது உள்ளூர் பிரச்னைகளை கிராம சபையில் எவ்வாறு கொண்டு சென்று தீர்வு காண்பது என்பதையும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல், தங்களது உள்ளாட்சி கவுன்சிலர்களை எவ்வாறு பொறுப்புடன் செயல்பட வைப்பது என்பதையும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரே நாளில் நடைபெறும் மாற்றம் அல்ல; நீண்டகால செயல்முறை.
ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி
இதற்காக, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ஆம் தேதி, ‘ஏபிஜே அப்துல் கலாம் நெறிமுறை மற்றும் அரசியல் மையம்’ தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக கோயம்புத்தூரில் 300 பேருக்கான பயிற்சி அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கும்.
2027 அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் ஓராண்டில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்னைகள் தொடர்பாக பயிற்சி அளிப்பதே இலக்காகும்.
வாக்குரிமையைப் பயன்படுத்தும்போது, ஆட்சியாளர்களிடம் சரியான கேள்விகளை எழுப்பும் திறன் வாக்காளர்களுக்கு இருக்க வேண்டும். உதாரணமாக, ‘தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகளை தமிழகத்தில் செயல்படுத்த சுமார் ரூ.90 ஆயிரம் கோடி தேவைப்படும் நிலையில், அந்த நிதியை எங்கிருந்து பெறப் போகிறீர்கள்?’ என்று அரசியல் கட்சிகளிடம் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.
‘சரியான தலைவர்களை மக்கள் தேர்வு செய்வார்கள்’
வாக்காளர்கள் கல்வியறிவும், அரசியல் விழிப்புணர்வும் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம். வாக்காளர்கள் தெளிவாகச் சிந்திக்கத் தொடங்கும்போது, தங்களுக்கான சரியான தலைவர்களை அவர்களே தேர்வு செய்வார்கள்.
ஒரு கட்டத்தில் பாஜகவை விட்டு விலக வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், அனைத்து அரசியல் கட்சிகளையும் மிகுந்த மரியாதையுடன் மதிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியையும் தொடர்ந்து மிகுந்த மரியாதையுடன் மதிக்கிறேன்” என்றார் அண்ணாமலை.