தூத்துக்குடி முள்ளக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக உப்பள நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முத்தையாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக உப்பள நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், உப்பள நிலங்களை பாதுகாக்கக் கோரியும், மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சந்தனகுமார் தலைமை வகித்தார். தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலச் செயலாளர் ஆட்டோ கணேசன் முன்னிலை வகித்தார்.
மண்டல துணைச் செயலாளர் செந்தூர் அர்ஜுன், முன்னாள் மாநிலச் செயலாளர் முரசு தமிழப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
அப்போது அவர்கள் பேசியதாவது:
முள்ளக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 2,000 குடும்பங்கள் உப்பு உற்பத்தித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பல தலைமுறைகளாக உப்பு உற்பத்தி நடைபெற்று வரும் உப்பள நிலங்களை கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக கையகப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது.

உப்பள நிலங்களை அழிப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, உப்பள நிலங்களையும் அத்தொழிலை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, துணைச் செயலாளர் வனவளவன், வழக்குரைஞர் காளி பவுன்ராஜ், விஜி பாண்டியன், சிக்கந்தர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட மகளிர் அணி செயலாளர் முருகேஸ்வரி தலைமையில் மகளிர் அணியினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.