அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் செல்லக்குமார் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜரின் நல்லாட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். இதற்காக 'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' என்ற முழக்கத்தை முன்னிறுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்க்கிறது. நீட் பயிற்சி மையங்கள் வினாத்தாள் விற்பனை உள்ளிட்ட முறைகேடுகள் மூலம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருகின்றன. இதன் காரணமாக ஆண்டுதோறும் பல மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் நீட் தேர்வுக்கு எதிரான குரலை காங்கிரஸ் தொடர்ந்து எழுப்பி வருகிறது.
இந்த கருத்துகளை வலியுறுத்தும் வகையில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டுள்ளது" என்றார்.
பின்னர், டாக்டர் செல்லக்குமார் முன்னிலையில் சுரேஷ் பெர்னான்டோ மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.