பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, அனைவருக்கும் கல்வி உரிமை, சமத்துவம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தியும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பயிற்சி நிலைய முறைகேடுகளை கண்டித்தும், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இப்போட்டியில், 14 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமை வகித்தார்.
பனிமய மாதா பேராலயம் முன்பிருந்து அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் செல்லக்குமார் போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியாளர்கள் கேம்ப்-1 ரயில்வே கேட் வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சென்று மீண்டும் தொடக்க இடத்தை வந்தடைந்தனர்.
ஆண்கள் பிரிவில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ.20 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.15 ஆயிரம், 4-ஆம் பரிசாக ரூ.10 ஆயிரம், 5-ஆம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. பெண்கள் பிரிவில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த ஆர்த்தி முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் பெற்றார். 2-ஆம் பரிசு ரூ.7 ஆயிரமும், 3-ஆம் பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டன.
மேலும், 10 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 124 பேருக்கு பரிசுத் தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டதுடன், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. டேனியல்ராஜ், வழக்கறிஞர் சுப்பிரமணிய ஆதித்தன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மினி மாரத்தான் போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 1,887 பேர் பங்கேற்று ஓடியது குறிப்பிடத்தக்கது.