திராவிட முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் இன்று (செப்.9) மாலை 4 மணியளவில் மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா R. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமைக் கழக பிரதிநிதிகளான மாநில விவசாய அணி துணைச் செயலாளர் என். நல்லசேதுபதி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் தமிழ் கா. அமுதரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கழகத்தின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, கழக நிர்வாக சீரமைப்பு, கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துதல், நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் அடிமட்ட அளவில் கழகப் பணிகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.
மேலும், கழக ஆக்கப்பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்வது, பொதுமக்களிடம் கழகத்தின் செயல்பாடுகளை கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
“நான் சொல்வது புரிகிறதா?” – நகைச்சுவையுடன் கேட்ட அனிதா ராதாகிருஷ்ணன்
கூட்டம் தொடங்கியபோது “நன்றி, வணக்கம்” என்ற உரையுடன் தனது பேச்சைத் தொடங்கிய அனிதா ராதாகிருஷ்ணன், தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார். தனது உரையின் ஒரு கட்டத்தில், அங்கு கூடியிருந்த நிர்வாகிகளை நோக்கி “நான் சொல்வது புரிகிறதா?” என நகைச்சுவை கலந்து கேட்டார்.
அவரது இந்தப் பேச்சு கூட்டத்தில் இருந்த நிர்வாகிகளிடையே கவனத்தை ஈர்த்தது.
இதனிடையே, திமுகவில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் மற்றும் சீரமைப்புகள் தொடர்பாக அண்மைக்காலமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களின் மாவட்டச் செயலாளர் பதவி தொடர்பாகவும் கட்சி வட்டாரங்களில் செய்திகள் பரவி வரும் சூழலில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய விதம் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
எனினும், அவரது “நான் சொல்வது புரிகிறதா?” என்ற கருத்து குறிப்பிட்ட பதவி மாற்றம் அல்லது தனிப்பட்ட அரசியல் முடிவை நேரடியாகக் குறிக்கிறதா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. இதனால், அவரது பேச்சு சூசகமாக இருந்ததா என்ற விவாதம் திமுகவினர் மற்றும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள் இளையராஜா, சரவணகுமார், ராமசாமி, தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் ரெங்கசாமி உள்ளிட்ட கழக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள், சார்பு அணி மாவட்ட அமைப்பாளர்கள், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில், மாவட்டம் முழுவதும் கழக அமைப்பை மேலும் வலுப்படுத்தி, தலைமைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.