தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் உப்பளங்களில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முள்ளக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் உப்பு உற்பத்தித் தொழிலை பாதிக்கும் வகையில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படக் கூடாது என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். உப்பளங்களை நம்பி வாழும் தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, உப்பளங்களில் கருப்புக்கொடிகளை ஏந்தியபடி திரண்ட போராட்டக்காரர்கள், கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் உடனடியாக அறிவிப்பு வெளியிட்டு, கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவது குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அடுத்தகட்டமாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.