தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு, ‘ரீல்ஸ் மாடல்’ விளம்பரத்தில் கவனம் செலுத்துவதாக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதற்கு அண்மையில் நடைபெற்ற சம்பவங்களே சாட்சியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியில் பணியிடத்திலேயே பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், இச்சம்பவத்தில் காவல்துறையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர் தொடர்புடையதாகக் கூறப்படுவது காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்குவதாகவும் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
மேலும், நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் இளம்பெண் ஒருவரை கும்பல் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு நகைகளை பறித்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பவமும், வள்ளியூர் அருகே வடக்கன்குளம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவமும் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘சிங்கப் பெண்’ சிறப்புப் படையின் செயல்பாடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் அச்சத்தில் வாழும் நிலையில், அந்தப் படையின் செயல்பாடு எங்கே என்றும், குற்றங்கள் தொடரும்போது அரசின் கண்காணிப்பும் நடவடிக்கையும் எங்கே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“கேமரா முன்பு ரீல்ஸ் எடுப்பதால் மட்டும் ஆட்சி நடத்திவிட முடியாது. மக்களின் உயிரையும் பாதுகாப்பையும் காப்பதே உண்மையான ஆட்சியின் அளவுகோல்” என முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
‘வெற்றி மாடல்’ என விளம்பரம் செய்வதை விடுத்து, தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக வாழும் சூழலை அரசு உருவாக்க வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கை இரும்புக்கரம் கொண்டு நிலைநாட்டி முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“ரீல்ஸ் அரசியலை விட்டுவிட்டு ரியாலிட்டிக்கு வாருங்கள்” என தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தியுள்ளார்.