தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளை முன்னிட்டு சிறப்பு அலங்கார சேவைகள் நடைபெற உள்ளன. இதையொட்டி பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்து வழிபடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.
26.09.2026 அன்று ஸ்ரீ குருவாயூர் அம்பல அலங்கார சேவையும், 03.10.2026 அன்று ஸ்ரீ பத்மாவதி தாயார் அலங்கார சேவையும் நடைபெற உள்ளன. தொடர்ந்து 10.10.2026 அன்று ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதி அலங்கார சேவையும், 17.10.2026 அன்று ஸ்ரீ ராஜாங்க அலங்கார சேவையும் நடைபெற உள்ளன.

இந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால், பிராகாரத்தை சுற்றி வருவதற்கு தற்காலிகமாக வசதி இருக்காது. சாமி தரிசனம் செய்த பின்னர் பக்தர்கள் நேரடியாக வெளியே செல்லும் வகையில் உரிய வழித்தட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
மேலும், பக்தர்கள் அதிகளவில் வந்தாலும் அனைவருக்கும் தேவையான அளவு பிரசாதம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பெருமாள் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.
பேட்டியின்போது சிவன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கந்தசாமி, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, அறங்காவலர்கள் ஜெயலெட்சுமி, மகேஷ்வரன் மற்றும் திருக்கோயில் அர்ச்சகர் வைகுண்டராமன் ஆகியோர் உடனிருந்தனர்.