தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஊரணி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமலேயே தூர்ந்து பாழடைந்து வரும் அவலம் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலையின் வீ த லீடர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த இயக்கத்தின் நிர்வாகி உமரி எஸ். சத்தியசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாநகராட்சியுடன் கடந்த 2008-ம் ஆண்டு இணைக்கப்பட்ட அத்திமரப்பட்டி ஊராட்சியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஊரணி ஒன்று உள்ளது. இந்த ஊரணி அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கும், கால்நடைகளின் நீர் ஆதாரமாகவும், மழைநீரை தேக்கி வைக்கும் நீர்நிலையாகவும் நீண்ட காலமாக பயன்பட்டு வந்தது. மேலும், ஊரணி பகுதியில் அமைந்திருந்த விநாயகர் கோவிலில் பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர்.
மாநகராட்சியுடன் அத்திமரப்பட்டி இணைக்கப்பட்ட பின்னர், அந்த பகுதி மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தில் 58-வது வார்டாக மாற்றப்பட்டது. முள்ளக்காடு பேருந்து நிறுத்தத்துக்கு பின்புறம் அமைந்துள்ள இந்த ஊரணியில் மாநகராட்சி சார்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற இந்த பணிகளுக்கு சுமார் ரூ.1 கோடி நிதி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், சீரமைப்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படாமல் ஊரணியின் ஒரு பகுதியில் மட்டுமே பணிகள் செய்யப்பட்டுள்ளன. பாலத்தின் மறுபுறம் அமைந்துள்ள மற்றொரு பகுதி கடந்த 18 ஆண்டுகளாக முறையாக சீரமைக்கப்படாமல் கிடக்கிறது. அப்பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதுடன், தனியார் ஆக்கிரமிப்புக்கு வழிவகுக்கும் வகையிலும் நிலைமை காணப்படுகிறது.
மேலும், அப்பகுதியில் பொதுமக்கள் வழிபட்டு வந்த விநாயகர் கோவில் மட்டும் அகற்றப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்டுள்ள நிலையிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மக்கள் வரிப்பணத்தில் சுமார் ரூ.1 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஊரணி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமலேயே தூர்ந்து பாழடைந்து வருவது வேதனை அளிக்கிறது. இதனால் அரசு நிதி முறையாக பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.
எனவே, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா மற்றும் மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் ஆகியோர் நேரில் சென்று ஊரணியை ஆய்வு செய்ய வேண்டும். மக்கள் வரிப்பணம் வீணாகாத வகையில் சீரமைப்பு பணிகளை முழுமையாக முடித்து, பொதுமக்கள் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் தேவையான அடிப்படை வசதிகளுடன் ஊரணியை முறையாக அமைத்து உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.
மேலும், கடந்த 18 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கிடக்கும் ஊரணியின் மறுபகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, நீர்நிலையை பாதுகாக்க வீ த லீடர் இயக்கம் தயாராக உள்ளது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் தங்களுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் உமரி எஸ். சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.