காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டத்தின் நில எடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் 4 தனி வட்டாட்சியர் அலகுகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் பணிக்காலத்தை உடனடியாக நீட்டித்து, நிலுவையில் உள்ள மூன்று மாத ஊதியத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டத்தின் கீழ் நில எடுப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் 4 தனி வட்டாட்சியர் அலகுகளின் பணிக்காலம் கடந்த 2025 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. திட்டப் பணிகள் தடையின்றி தொடரும் வகையில், 2026 ஜனவரி 1 முதல் 2027 டிசம்பர் 31 வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பணிக்காலத்தை நீட்டிக்கக் கோரி கடந்த மார்ச் 20-ஆம் தேதி தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை பணிக்கால நீட்டிப்புக்கான அரசாணை வெளியிடப்படாததால், அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களின் ஊதியம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2026-ஆம் ஆண்டின் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ஊதியம் மற்றும் இதர செலவுகளுக்குத் தேவையான ரூ.66.52 லட்சம் நிதியை விடுவிக்க கடந்த மே 12-ஆம் தேதி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், இன்று வரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் கிடைக்காமல், திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். அன்றாட வாழ்க்கைச் செலவுகள், குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளை கூட சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மனிதாபிமான அடிப்படையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்ட ஊழியர்களின் பணிக்காலத்தை 2027 டிசம்பர் 31 வரை நீட்டித்து அரசாணை வெளியிட வேண்டும். மேலும், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான நிலுவை ஊதியத்தை வழங்குவதற்குத் தேவையான ரூ.66.52 லட்சம் நிதியையும் உடனடியாக விடுவித்து, ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.