மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணித்துள்ளதாக குற்றம்சாட்டி, ஒன்றிய பாஜக அரசையும் அதற்கு துணைபோவதாக குற்றம் சாட்டப்படும் அதிமுகவையும் கண்டித்து தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமைக் கழக அறிவிப்பின்படி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கட்சிகள் சார்பில் சிதம்பரனார் பேருந்து நிறுத்தம் (வி.வி.டி. சிக்னல்) அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி மற்றும் வட்ட கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:–
“தமிழகம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்து வரும் மாநிலம். ஆனால் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மக்களின் உரிமையை மறுக்கும் செயல்.
தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி போன்ற முக்கிய துறைகளுக்கு தேவையான நிதி வழங்கப்பட வேண்டும். அரசியல் காரணங்களால் தமிழகத்தை புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழக அரசின் நலத்திட்டங்களும், வளர்ச்சித் திட்டங்களும் தடையின்றி செயல்பட மத்திய அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும். மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
தமிழக நலனில் அக்கறை கொள்ளாமல் மத்திய அரசுக்கு துணைபோவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மக்கள் நலனை முன்னிறுத்தாத அரசியலை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்,” என்றார்.
தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும், தமிழக மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் குற்றம்சாட்டினர். மாநிலத்தின் நலன் கருதி மத்திய அரசு உடனடியாக உரிய நிதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சியினரும், திமுக முன்னோடிகளும், பல்வேறு சார்பு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் திரளாக பங்கேற்றனர்.