தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் பங்கேற்பு திட்டமான “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் ரூ.98 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அலங்கார வண்ண விளக்குகள் சில மாதங்களிலேயே செயலிழந்து கிடப்பதாகக் கூறி, பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் குற்றம்சாட்டினார்.

2024 மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், நகரின் முக்கிய சாலைகளின் சென்டர் மீடியன்களில் உள்ள மின் கம்பங்களில் அலங்கார வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டன. அதிகாரப்பூர்வ தகவலின்படி, தேசியக்கொடி வண்ண விளக்குகள் ரூ.59,84,685 மதிப்பிலும், சாதாரண வண்ண விளக்குகள் ரூ.38 லட்சம் மதிப்பிலும் அமைக்கப்பட்டதாகவும், மொத்தம் ரூ.98 லட்சம் செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இவ்வளவு பெரிய தொகை செலவில் அமைக்கப்பட்ட விளக்குகள் குறுகிய காலத்திலேயே அணைந்து கிடப்பது மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என்றும், பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்:
ஒப்பந்த நகல் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டதா?
ஒப்பந்தத்தில் பராமரிப்பு காலம் எத்தனை ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளது?
தரப் பரிசோதனை அறிக்கை எங்கே?
பணிகள் முடிந்தபின் இறுதி ஆய்வு சான்றிதழ் வழங்கப்பட்டதா?
பழுதடைந்த விளக்குகள் குறித்து ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா?
அபராதம் விதிக்கப்பட்டதா?
ரூ.98 லட்சம் எந்த கணக்கின் கீழ், எந்த தீர்மானத்தின் மூலம் செலவிடப்பட்டது?
இந்த கேள்விகளுக்கான ஆவணங்கள் உடனடியாக வெளியிடப்படாவிட்டால், நிர்வாக அலட்சியம் அல்லது முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெறும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த விவகாரத்தில் துறை ரீதியான விசாரணை நடத்தி, பொறுப்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தொடர்புடைய ஆவணங்களும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும் என்றும் பா.ஜ.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்யத் தவறினால், சட்டபூர்வமான போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் ஆவணங்களுடன் விளக்கம் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.