தூத்துக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனைத்து நுழைவாயில்களையும் 24 மணி நேரமும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் A.சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை மாவட்டத்தின் முக்கிய சிகிச்சை மையமாக இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை பெறும் நோயாளிகள் இங்கு வருகின்றனர். தற்போது மருத்துவமனையில் உள்ள பிரதான நுழைவாயில் மட்டும் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற வாசல்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே செயல்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மருத்துவமனையின் முக்கிய வாசல் VVD சிக்னல் அருகே அமைந்துள்ளது. அப்பகுதி எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் இடமாகும். இந்த வாசல் மட்டுமே இரவு பகல் என தொடர்ந்து திறந்து வைக்கப்படுவதால், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதும், நோயாளிகள் உள்ளே செல்லவும், வெளியேறவும் சிரமம் ஏற்படுகிறது என கூறப்படுகிறது.
மேலும், திருச்செந்தூர் பிரதான சாலை பகுதியில் உள்ள ஒரு நுழைவாயிலும், சுப்பையா முதலியார்புரம் தெருவில் உள்ள மற்றொரு நுழைவாயிலும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே திறக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சுப்பையா முதலியார்புரம் பகுதியிலுள்ள வாசல், ஆம்புலன்ஸ் வருகை நேரங்களில் மட்டும் திறக்கப்படுவதாகவும், இதனால் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மருத்துவமனைக்கு வர அதிக தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு, மருத்துவமனையில் உள்ள மூன்று நுழைவாயில்களையும் 24 மணி நேரமும் திறந்து வைக்க வேண்டும் என A.சக்திவேல் வலியுறுத்தினார். குறைந்தபட்சமாக காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து வாசல்களையும் திறந்துவைத்தால் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் பெரும் பயன் அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், தாய்பேறு பிரிவில் உள்ள லிப்ட் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மருத்துவமனை முழுவதும் தரமான குடிநீர் வசதி மற்றும் போதிய மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இக்கோரிக்கை தொடர்பான மனு, இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. நிகழ்வில் சமூக ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் முத்து பெரியநாயகம், மகளிர் அணி மாவட்ட தலைவர் வெள்ளத்தாய் அன்னராஜ், மாவட்ட நிர்வாகிகள் முகேஷ், குலசை ஈ.வி.ரமேஷ், பொன் விக்னேஷ், மண்டல் நிர்வாகிகள் விக்னேஷ், சுந்தர், கார்த்திக், கல்யாணசுந்தரம், ராஜேஷ், மாரிஸ் குமார் மற்றும் சமூக ஆர்வலர் பாலதண்டாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.