தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கீழூர் ரயில்வே நிலையம் செல்லும் சாலை மற்றும் ரோஜ் பூங்காவிலிருந்து மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் – தூத்துக்குடி மண்டல மையம் வரை உள்ள பகுதிகள் பல நாட்களாக இருள் சூழ்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடற்கரைச் சாலை, நகரிலிருந்து துறைமுகம், துறைமுக குடியிருப்பு மற்றும் அனல் மின்நிலையம் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் முக்கியப் பாதையாகும். இந்தச் சாலை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை சேதமடைந்துள்ளதுடன், தெருவிளக்குகள் இயங்காததால் இரவு நேரங்களில் முழுக்க இருள் சூழ்ந்துள்ளது. குறிப்பாக அப்பகுதியில் உள்ள 8 மின் கம்பங்களில் விளக்குகள் எரியாத நிலை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வாகன விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சிலர் பைக் ரேஸ் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டும் சம்பவங்களும் நடைபெறுகின்றன என கூறப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு மருத்துவர் மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவமும் இதே பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல், கீழூர் ரயில்வே நிலைய நுழைவாயில் பகுதியில் இருந்து ராஜம் திருமண மண்டபம் வரை பல நாட்களாக தெருவிளக்குகள் எரியாமல் இருள் நிலவி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை மாநகராட்சிக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தினமும் இரவில் முத்துநகர் விரைவு ரயில் மூலம் சென்னை செல்லும் பயணிகள் அந்தச் சாலையை பயன்படுத்தி ரயில் நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்கள் தனியாக செல்ல முடியாத அளவுக்கு இருள் சூழ்ந்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.