தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB), 2026–27 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.411.51 கோடி நிகர லாபம் ஈட்டி சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
தூத்துக்குடியில் நடைபெற்ற இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில், ஜூன் 30, 2026-இல் முடிவடைந்த முதல் காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதி முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சலி எஸ். நாயர் வெளியிட்டார்.
வங்கியின் மொத்த வணிகம் 23.04 சதவீதம் உயர்ந்து ரூ.1,21,715 கோடியாகவும், மொத்த வைப்புத்தொகை ரூ.64,409 கோடியாகவும், கடன் வழங்கல் ரூ.57,306 கோடியாகவும் உயர்ந்துள்ளது. நிகர லாபம் கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 34.97 சதவீதம் அதிகரித்து ரூ.411.51 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும், மொத்த வாராக்கடன் 0.69 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.17 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு காலாண்டில் புதிதாக 6 கிளைகள் மற்றும் ஒரு மண்டல அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது நாடு முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 628 கிளைகள், 13 மண்டல அலுவலகங்கள் மூலம் 53 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருவதாக வங்கி தெரிவித்துள்ளது.