இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது தந்தை பெரியசாமி, தன்னை மற்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை அரசியல் நாகரிகமின்றி அவதூறாக விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.
மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது தூத்துக்குடியில் யாரும் களத்தில் இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. அப்போது எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் தூத்துக்குடியின் அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டோம். அன்றைய துணை முதல்வர் மற்றும் தொகுதியின் எம்.பி. உள்ளிட்டோரும் நேரில் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்றார்.
மேலும், கரூரில் அப்போதைய தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை திரும்பிப் பார்க்காமல் புறமுதுகு காட்டிச் சென்றவர்கள் தற்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவது பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் திமுகவினர் வசூல் செய்வதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருப்பது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு. அதற்கு ஆதாரம் இருந்தால் வெளியிட வேண்டும். இல்லையெனில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதிகாரம் உள்ளது என்பதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை கைவிட்டு, பல்வேறு கட்சிகளில் இருந்த அமைச்சர் நிர்மல்குமார் இனியாவது அரசியல் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.