தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே முள்ளக்காடு முதல் பழைய காயல் வரை சுமார் 3,000 ஏக்கர் உப்பள நிலங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை தேமுதிக கடுமையாக எதிர்க்கும் என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பளங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊர் எல்லையில் நூதன விநாயகர் ஆலயம் முன்பாக பெண்கள் ஆரத்தி எடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்வில் மாநில தேமுதிக தென்மண்டல செயலாளர் சந்திரன், மாநகர் மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவன் உள்ளிட்ட நிர்வாகிகள், உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர் மற்றும் நிர்வாகிகள் மந்திரமூர்த்தி, பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகர், பாலசுப்பிரமணியன், ஈபால், பொன்ராம், பிரபாகர், பாரத், ஸ்ரீராம், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உப்பள தொழிலாளர்கள், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் அப்பகுதி பெண்களை நேரில் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளை கேட்டறிந்தார். இதன் போது, “உப்பளங்கள் அழிந்தால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். உடனடி தீர்வு வேண்டும்,” என பெண்கள் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதிலளித்த அவர், “தேமுதிக தற்போது ஆளும் கட்சியும் அல்ல; ஆண்ட கட்சியும் அல்ல. இருப்பினும், உங்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கண்டிப்பாக கொண்டு செல்வோம். தீர்வு கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“தூத்துக்குடி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது உப்பு; அடுத்ததாக முத்துக் குளித்தல். இங்குள்ள உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைக்கும் முயற்சி தொடர்ந்தால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் போன்ற சூழ்நிலை உருவாகும். உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்களின் பிரச்சனையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு செல்வேன். வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணியில் உள்ள கட்சி ஆட்சி அமைக்கும். அப்போது, தூத்துக்குடி உப்பள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக தேமுதிக முழு ஆதரவுடன் குரல் கொடுத்து இந்த திட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்,” என்றார்.