தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிராமப்புறங்களில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வழக்கமாக பயிர் பணிகளுக்காக கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தி மீண்டும் கடன் பெறுவது நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ஏற்கனவே பெற்ற கடன்களை முழுமையாக திருப்பிச் செலுத்திய விவசாயிகள், மீண்டும் வேளாண்மை பணிகளை தொடங்குவதற்காக கடந்த இரு மாதங்களாக கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று கடன் கோரியும், பல்வேறு காரணங்களை கூறி தாமதப்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். இதனால் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, தாமிரபரணி நதிக்கரையோரம் உள்ள ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தின் உமரிக்காடு ஊராட்சி பகுதியைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கடன் கிடைக்காத காரணத்தால் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு தேவையான கடன்களை விரைவாக வழங்க வேண்டும் என்றும், வேளாண்மை பணிகள் தடையின்றி நடைபெற உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.