நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள 100 கொடி கம்பத்தில் தேசிய கொடியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி உரையாற்றுகையில்,
“இந்திய அரசியலமைப்பு நமக்கு வழங்கிய உரிமைகளோடு சேர்த்து கடமைகளையும் நினைவூட்டும் நாள் குடியரசு தினம். சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து, நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருமித்துப் பணியாற்ற வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர், சாலை, சுகாதாரம், தூய்மை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என்றார்.
மேலும், மாநகரின் தூய்மையை பாதுகாக்க முக்கிய பங்காற்றும் தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டிய அவர், “நகரத்தின் சுத்தமும் நலனும் இவர்களின் உழைப்பின் பலனே. மாநகராட்சி நிர்வாகம் எப்போதும் அவர்களுக்கு துணை நிற்கும்,” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி நற்சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். இது பணியாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, அனைவரும் ஒருமித்த குரலில் பாடி தேசபக்தியை வெளிப்படுத்தினர்.