தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற தெருமுனை தேர்தல் பிரச்சார கூட்டத்தில், அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் அமைச்சர் கீதா ஜீவனை கடுமையாக விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
மழை வெள்ளத்தின் போது பொதுமக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்ற அமைச்சர் கீதா ஜீவனின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அந்த நேரத்தில் நான் எந்த பதவியிலும் இல்லாத சாதாரண அதிமுக தொண்டனாக இருந்தபோதிலும், நேரடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தேன். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி மக்களுடன் இருந்து அவர்களின் துயரை பகிர்ந்தேன்.
இந்நிலையில், நான் கட்சியில் இணைத்த ஒரு இளைஞரை தூண்டிவிட்டு, அமைச்சர் எனக்கு எதிராக வீடியோ பதிவு செய்ய வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அந்த வீடியோவில் நான் எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது.
மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள் பல இருக்கும் நிலையில், அவற்றை தீர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர் இவ்வாறான பேச்சுக்களில் ஈடுபடுவது ஏமாற்றமளிக்கிறது.
அந்த காலகட்டத்தில் நான் அமைச்சராக இல்லாவிட்டாலும், மக்களுக்காக செய்ய வேண்டிய பணிகளை செய்தேன். ஆனால், அமைச்சராக இருந்தவர் செய்ய வேண்டிய கடமைகளை முழுமையாக செய்யாமல் தற்போது என்னை குற்றம் சாட்டுவது அரசியல் நோக்கத்துடன் நடைபெறும் செயல்.
எனவே, உண்மையை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்; அரசியல் ஆதாயத்திற்காக கூறப்படும் தவறான குற்றச்சாட்டுகளை மக்கள் நிராகரிப்பார்கள் என்று சி.த. செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.